search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுன கார்கே"

    • உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
    • புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.

    அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார். புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார். புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார். அதுபோல 9 பொதுச் செயலாளர்களையும் மாற்ற ராகுலிடம் அவர் அனுமதி கேட்டுள்ளார்.

    இவை தவிர மாநில பொறுப்பாளர்களையும் கூண்டோடு மாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். சோனியா, ராகுல் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகே புதிய மாநில தலைவர்கள் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும் என கார்கே பேச்சு
    • அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

    என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும்.

    தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.

    தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.
    • பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல என கார்கே விமர்சனம்

    ராஞ்சி:

    மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசார பயணத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தொடங்கி வைத்தார்.

    இக்கூட்டத்தில் பேசிய கார்கே, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.82,000 கோடியும் வழங்கி உள்ளது. இந்த விஷயத்தை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார்.
    • உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி கார்கே கூறி உள்ளார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று யாத்திரை காசிகுண்ட் என்ற இடத்தை அடைந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஷ்மீர் போலீசாரை காணவில்லை. பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார். யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தி யாத்திரையில் அடுத்த இரண்டு நாட்களில் பெரும் கூட்டம் சேரும். மேலும் வருகிற 30-ந் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    யாத்திரையில் துரதிர்ஷ்டவசமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பிறகு இந்த கடிதத்தை எழுதுகி றேன். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை மற்றும் விழா முடியும் வரை உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, "யாத்திரை முடியும் வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறியுள்ள ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் அறிக்கையை வரவேற்கிறோம்" என்றார்.

    இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் மீண்டும் தொடங்கியது.

    • ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி.
    • அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது:- 


    இமாசல பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம்.

    எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதையொட்டி அவருக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் 2 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் சர்வோதயா மாநாடு நடக்கிறது.

    இதில் கர்நாடகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.

    நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும்.

    உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது.

    ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங். தலைவர் ஆகியிருக்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்கிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
    • பொதுத் தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    பொதுத்தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அதன்பின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஓட்டுப் பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 4 பெட்டிகளில் உள்ளன. அந்தப் பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.

    இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதலில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் திறந்து மொத்தமாக டிரம்மில் கொட்டி கலக்கப்படும். எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வ ளவு வாக்குகள் என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலந்த பிறகு நூறு நூறாக பண்டல் போடப்படும். அதன் பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சரி பார்க்கப்படும். பிறகு வேட்பாளர் வாரியாக வாக்குகள் பிரிக்கப் பட்டு எண்ணப்படும்

    ஓட்டு எண்ணிக்கை முடிந்து இன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும். அப்போது காங்கிரசின் புதிய தலைவர் யார்? என்பது தெரிந்துவிடும்.

    • ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன்.
    • மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மல்லகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிடுகின்றனர். இதில், அகில இந்திய அளவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், 2 தலைவர்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    கடந்த 6-ந் தேதி சசிதரூர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகை தந்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வரவேற்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். அவருடன் கேரள மாநில முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, புதுவை வைத்திலிங்கம் எம்.பி., புதுவை மாநில முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்து இருந்தனர். உட்கட்சி தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

    கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    உங்களிடம் ஆசீர்வாதமும், வாக்குகளையும் பெற வந்தேன். கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்றவர்கள் போல என்னிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனது வாக்குறுதி. கடந்த 4 மாதங்களுக்கு முன் உதய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக ஆட்களை நியமிப்பேன்.

    ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன். ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள். எனவே, மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவேன்.

    1969-ல் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவராக பொறுப்பேற்று படிப்படியாக பல்வேறு பதவிகளை அடைந்து, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு வந்துள்ளேன். நான் ஏணியின் அடிப்பகுதியில் இருந்து படிப்படியாக மேலே ஏறி வந்தவன். சிலர் (சசிதரூர்) நேராக மேலே இருந்துவிட்டு இப்போது கீழே பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பள்ளமாக தெரிகிறது.

    நான் செல்கிற இடங்களில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் நான் செல்கிற இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்னிடம் நீங்கள் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படுவீர்களா? ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். நான் அப்படி ஒன்றும் செயல்பட மாட்டேன். நான் கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன். நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துவேன். அதுவும் உங்களுடன் (காங்கிரஸ் நிர்வாகிகளுடன்) இணைந்து செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் காண்டீபன், தளபதி பாஸ்கர், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன.
    • மோடி அரசு கொண்டுவந்த 8 சிறுத்தைகள் இவைதான் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த 8 சிறுத்தைகள் இவைதான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் எம்.பி.யான மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக கார்கே வெளியிட்டுள்ள டுவிட்டரில், வேலையின்மை, பணவீக்கம், வறுமை, பட்டினி, வகுப்புவாதம், வெறுப்பு, வன்முறை, அடக்குமுறை ஆகிய இந்த எட்டு சிறுத்தைகளும் மோடி அரசால் இந்திய மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.

    ×